உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் - ஏ.சி. மெக்கானிக் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் - ஏ.சி. மெக்கானிக் பலி
Published on

உளுந்தூர்பேட்டை,

சங்கராபுரம் தாலுகா ராவுத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் மகன் பாலகிருஷ்ணன்(வயது 24). ஏ.சி. மெக்கானிக். இவர் தன்னுடன் பணிபுரியும் உளுந்தூர்பேட்டை தாலுகா வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் ஜெயபால்(22) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கராபுரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டினார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, திருக்கோவிலூரில் இருந்து எலவனாசூர்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்று பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த ஜெயபாலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விபத்து பற்றி அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com