திங்கள்சந்தை அருகே லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாப சாவு

திங்கள்சந்தை அருகே லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக பலியானார்.
திங்கள்சந்தை அருகே லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாப சாவு
Published on

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 14), 9-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருந்தான். இந்தநிலையில் திங்கள்சந்தை அருகே மொட்டைவிளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தான்.

நேற்று மதியம் பிரசாந்த் தன்னுடைய உறவினர் அபினேஷ் (14) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றார். அபினேஷ் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

கோவிலுக்கு சென்ற இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டனர். அந்த சமயத்தில் திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவில் நோக்கி லாரி ஒன்று வந்தது. அப்போது வடக்கு பேயன்குழி பகுதியில் அபினேஷ், பிரசாந்த் வந்த மோட்டார் சைக்கிள் சாலையை கடக்க முயன்றது. இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருவரையும் லாரி பல அடி தூரம் இழுத்து சென்றபடி விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். படுகாயமடைந்த அபினேஷ் லாரியில் சிக்கி கொண்டதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து வந்து சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com