லாரி மோதி எலக்ட்ரீசியன் சாவு

நாகர்கோவிலில் லாரி மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதி எலக்ட்ரீசியன் சாவு
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் லாரி மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

எலக்ட்ரீசியன்

நாகர்கோவில் புத்தேரி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 21), எலக்ட்ரீசியன். இவர் நேற்று காலை 8 மணிக்கு வடசேரியில் இருந்து பார்வதிபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வெட்டூர்ணிமடம் வளைவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் லாரியின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து ஜெகதீசும் சிக்கிக் கொண்டார். இது தெரியாமல் லாரி நிற்காமல் சென்று கொண்டே இருந்தது. சிறிது தூரம் வரை சென்ற பிறகு தான் லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி இருந்தது, லாரி டிரைவருக்கு தெரிய வந்தது.

பரிதாப சாவு

இதை தொடர்ந்து டிரைவர் உடனே லாரியை நிறுத்தினார். இதற்கிடையே லாரியின் அடிப்பகுதியில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகதீசை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com