மத்தூர் அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி: மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்கு

மத்தூர் அருகே லாரி மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தூர் அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி: மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்கு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஆலரஅள்ளியைச் சேர்ந்தவர் குமரேசன். என்ஜினீயர். இவரும், அஜித், வினோத் ஆகிய 3 பேரும் திருப்பத்தூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு கடந்த 16-ந்தேதி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நடுப்பட்டி பகுதியில் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குமரேசன் பலியானார். அஜித், வினோத் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் டிப்பர் லாரியை அதன் டிரைவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தினார். இதை அறிந்த பொதுமக்கள் சிலர் பள்ளி முன்பு இருந்த பூந்தொட்டிகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் மத்தூர் - திருப்பத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவரான புட்டமூப்பர்கொண்டாய் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் மற்றும் மண் கடத்தி வரும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com