

கடலூர்,
பிளஸ்-2 தேர்வு முடிவில் கடலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், ஆசிரியர்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தை கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்புராயன், ரவி, சண்முகம், வக்கீல் திருமார்பன், ஜெயக்குமார், ரவி, கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர்.
தொடர்ந்து அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து அல்வா கொடுக்க சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அங்கிருந்த அவரது நேர்முக உதவியாளர் முருகனிடம் அளித்தனர். ஆனால் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். இதையடுத்து அவரிடம் கோரிக்கை மனுவை அளித்து விட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.