கடந்த ஆண்டு 2,068 பேர் காசநோயால் பாதிப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2,068 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு 2,068 பேர் காசநோயால் பாதிப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 2 ஆயிரத்து 68 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

காசநோய் தினம்

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் உலக காசநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அதிகமான காசநோயாளிகளை கண்டறிந்து அரசுக்கு தெரியப்படுத்தியதற்காக 10 பேருக்கும், காசநோய் ஒழிப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த பிறதுறையை சேர்ந்த 5 பேருக்கும், காசநோய் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கும், காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ துறையை சேர்ந்த பணியாளர்கள் 7 பேருக்கும், 2021-ம் ஆண்டில் காசநோய் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநகர் மைய ஆஸ்பத்திரிக்கும், காசநோய் பங்களிப்பில் சிறப்பாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரிக்கும், காசநோய் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆக மொத்தம் 37 பேருக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பரிசோதனை

தூத்துக்குடிமாவட்டத்தில் கடந்த 2021-ம்ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 624 பேருக்கு காசநோய்க்கான சளிப்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 2 ஆயிரத்து 68 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு உள்ளது. இதில் 87 சதவீதத்தினர் பூரண குணம் பெற்று உள்ளனர். காசநோய்க்கான நான்கு மருந்துகளையும் ஒரே மாத்திரை வடிவத்தில் உள்ளடக்கிய எப்.டி.சி என்னும் மாத்திரைகளை கொண்டு டாட்ஸ் எனப்படும் நேரடிப்பார்வையின் கீழ் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை முறையானது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். டாட்ஸ் முறையில் காசநோய் சிகிச்சையை முழுகால அளவிற்கும் முறையாக எடுத்து கொண்டால் இந்த நோயிலிருந்து பூரணகுணம் பெறலாம்.

நடவடிக்கை

எச்.ஐ.வியும் காசநோயும் மோசமான இணைத்தொற்றாகும். கடந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுஉள்ளவர்களில் காசநோயால் 38 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர். மேலும், காசநோயை விரைந்து கண்டறியும் அதிநவீன சிபிநாட் கருவியானது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ட்ரூநாட் கருவியானது மாவட்ட காசநோய் மையத்திலும் திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகிறது. இத்தகைய நாட் பரிசோதனையின் மூலம் காசநோய் அறிகுறி உள்ளவர்கள் தங்களுக்கு காசநோய் உள்ளதா இல்லையா என்பதனை 2 மணி நேரத்திற்குள் தெரிந்து கொள்ளலாம். சமீபகாலமாக மருந்துக்கு கட்டுப்படாத எம்.டி.ஆர் காசநோயால் நமதுசமுதாயம் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

சாதாரணமாக ஆரம்ப நிலை காசநோயால் பாதிக்கப்படுவோர், தங்களுக்கான மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாததே எம்.டி.ஆர் காசநோய்க்கு காரணமாக அமைகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பேர் எம்.டி.ஆர் காசநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாலும் அவரது வங்கி கணக்கில் ரூ.500, ரூ.1000 வழங்கப்படும். டி.பி இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நெஞ்சக மருத்துவ பிரிவு தலைவர் சங்கமித்ரா, மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (காசம்) சுந்தரலிங்கம், இணை இயக்குநர் முருகவேல், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, தூத்துக்குடி மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (குடும்பநலம்) பொன்இசக்கி, துணை இயக்குநர் (தொழுநோய்) யமுனா, தூத்துக்குடி மாநகர நலஅலுவலர் அருண்குமார், இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் மருத்துவ அலுவலர் ஆல்பர் சேக்ரட் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com