

திருச்செந்தூர்,
தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உடனடியாக வழங்க வேண்டும். அவர்களுக்கு சீருடை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் ராவணன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சங்கத்தமிழன், தமிழ்வாணன், பூலாண்பாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மீனவர் மேம்பாட்டு பேராயத்தின் மாநில செயலாளர் நியூட்டன் பர்னாண்டோ, கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழ்குட்டி, விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளர் தமிழ்வளவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.