மனைவியை கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மனைவியை கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை
Published on

கொள்ளேகால்:மனைவியை கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பெண் கொலை

சாம்ராஜ்நகர் தாலுகா நாகவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், கொள்ளேகால் தாலுகா தனகெரே கிராமத்தை சேர்ந்த சாவித்ரம்மா என்பவரின் மகள் திவ்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின்போது சாவித்ரம்மா, வெங்கடேசுக்கு ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், வெங்கடேஷ் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி திவ்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த திவ்யாவை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி கிணற்றில் தள்ளி வெங்கடேஷ் கொலை செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாம்ராஜ்நகர் போலீசார், வெங்கடேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி லோகப்பா தீர்ப்பு வழங்கினார். அப்போது, போலீஸ்காரர் வெங்கடேஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com