கூடுதல் கட்டணம் நிர்ணயித்து சிட்டி எக்ஸ்பிரசாக இயக்குவதால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு

சாத்தூர் பகுதியில் கூடுதல் கட்டணம் நிர்ணயித்து சாதாரண டவுன் பஸ்களையும் சிட்டி எக்ஸ்பிரசாக இயக்குவதால் அதை பயணிகள் புறக்கணிக்கின்றனர். தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
கூடுதல் கட்டணம் நிர்ணயித்து சிட்டி எக்ஸ்பிரசாக இயக்குவதால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு
Published on

சாத்தூர்,

தமிழக அரசு கடந்த மாதம் பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. பின்னர் ஒட்டுமொத்த எதிர்ப்பை தொடர்ந்து சொற்ப அளவில் கட்டணம் குறைக்கப்பட்டது. கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனியார் பஸ்களில் முறையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் அரசு டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்களில் கூடுதலாகவும் குளறுபடியாகவும் கட்டணம் வசூலிப்பதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இது பகல் கொள்ளை என்று குமுறும் அளவுக்கு அரசு பஸ்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாத்தூரில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு முன்பு ரூ.6 முதல் ரூ.7 வரைதான் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. உயர்த்தப்பட்ட கட்டணமாக ரூ.8 வரைதான் வசூலிக்க வேண்டும். ஆனால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் குவிந்ததும் சிறப்பு பஸ் என்று கூறி ரூ.12 வரை வசூலிக்கின்றனர். சாதாரண டவுன்பஸ்கள் கூட கூட்டத்தைக்கண்டதும் சிறப்பு பஸ்களாகி விடுகின்றன.

காயலான் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பஸ்களை வைத்துக்கொண்டு சாதாரண பஸ், எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ், சிட்டி எக்ஸ்பிரஸ் என்று பெயர்களை மாற்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழிப்பறியாக உள்ளது என்று வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதனை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டவுன் பஸ்களை சிட்டி எக்ஸ்பிரசாக கூடுதல் கட்டணத்தில் இயக்குவதால் அதில் பயணிக்க பலரும் விரும்புவதில்லை. தனியார் பஸ்களை நாடுவதால் அதில் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாரிகளின் தவறான முடிவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக சாத்தூரில் இருந்து சிவகாசிக்கு தனியார் பஸ்களில் ரூ.12 முதல் ரூ.13-ம் அரசு டவுன்பஸ்களில் ரூ.14-ம் அரசு புற நகர் பஸ்களில் ரூ.15-ம் சிட்டி எக்ஸ்பிரசில் ரூ.19-ம் வசூலிக்கின்றனர். கோவில்பட்டிக்கு தனியார் பஸ்களில் ரூ.15 வசூலிக்கும் நிலையில் அரசு டவுன்பஸ்களில் ரூ.16-ம் புற நகர் பஸ்களில் ரூ.18-ம் சிட்டி எக்ஸ்பிரஸ்களில் ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விருதுநகருக்கு தனியார் பஸ் கட்டணம் ரூ.20 ஆகும். அரசு டவுன்பஸ்களில் ரூ.18-ம் புறநகர் பஸ்களில் ரூ. 20-ம் சிட்டி எக்ஸ்பிரசில் ரூ.25-ம் வசூலிக்கின்றனர். மதுரைக்கு தனியார் பஸ்களில் ரூ.65 வசூலிக்கும் நிலையில் அரசு புறநகர் பஸ்களிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை வசூலிக்கின்றனர். ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அதிகாரிகள் எடுத்த முடிவு தனியார் பஸ்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. ஆனால் கட்டணத்துக்கு பயந்து நெரிசல் மிகுந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

பஸ் கட்டண கொள்ளையைக்கண்டு ஓடும் நிலையில், சாத்தூர் பஸ் நிலையத்தில் தெற்கு ரெயில்வே சார்பில் சாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கான ரெயில் கட்டண விவரத்துடன் அட்டவணையை வெளியிட்டு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனை பார்த்துவிட்டு ஏராளமானோர் ரெயில்நிலையத்துக்கு நடையைக் கட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com