தமிழகத்தின் உள்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 18-ந்தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், வட தமிழகத்தில் மழை பெய்தது.

தற்போது அது வலுவிழந்து உள்தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 22-ந்தேதி (நேற்று) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.

இது தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலு இழக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

குறிப்பாக விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 1-ந் தேதி முதல் தற்போது (நேற்று) வரை 32 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 26 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டும் இதே நிலையில் தான் இருந்தது.

சென்னையை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வரை 66 செ.மீ. மழை பெற்று இருக்க வேண்டும். ஆனால் 31 செ.மீ. மழைதான் பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 45 சதவீதம் குறைவு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com