சந்திர கிரகணம்: மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலமாக பார்த்தனர்

வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், தொலைநோக்கி கருவிகள் மூலமாக நேற்று மாலை முதல் இரவு வரை சந்திர கிரகண நிகழ்வை ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் பார்த்தனர்.
சந்திர கிரகணம்: மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலமாக பார்த்தனர்
Published on

வேலூர்,

சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை 3-ம் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறார்கள். அந்தச் சந்திர கிரகண நிகழ்வு நேற்று நடந்தது. இது, அபூர்வ சந்திர கிரகணமாக கருதப்பட்டது. வேலூர் பகுதிகளில் சந்திர கிரகணம் தெரிந்ததால், அதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.

சந்திர கிரகணத்தைப் பார்வையிடுவதற்காக சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி கருவிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள், மாணவர்கள் அபூர்வ சந்திர கிரகணத்தைப் பார்வையிட்டனர்.

இதுபற்றி மாவட்ட அறிவியல் மைய அலுவலர் துரைராஜ் ஞானமுத்து கூறியதாவது:-

ஆர்வமுடன் பார்த்து வியந்தனர்

அபூர்வ சந்திர கிரகணத்தைப் பார்வையிடுவதற்காக தொலைநோக்கி கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் சந்திர கிரகண நிகழ்வை பார்க்க ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் வந்தனர். பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் வரிசையாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாலை 6.40 மணி முதல் இரவு 9 மணி வரை சந்திர கிரகணத்தைப் பார்க்க முடிந்தது. அதனை 700 பேர் பார்த்து வியந்தனர். அறிவியல் மையத்தில் சந்திர கிரகண நிகழ்வை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சந்திர கிரகணம் குறித்து மைய அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

படம் பிடித்தனர்

மேலும் வேலூர் கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்களின் செல்போன் மூலமாக சந்திர கிரகணத்தைப் படம் பிடித்தனர். சிலர் தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பழைய, புதிய பாலாற்றுப் பாலத்தில் வாகன ஓட்டிகள் பலர் தங்களின் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு, சந்திர கிரகணத்தைப் பார்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com