திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் ரூ.16 லட்சம் போதைப்பொருளை கடத்த முயற்சி மதுரை பயணி கைது

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற மதுரை பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் ரூ.16 லட்சம் போதைப்பொருளை கடத்த முயற்சி மதுரை பயணி கைது
Published on

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் காலை ஏர் ஏசியா விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையில் இருந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீரென திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். மேலும் மலேசியா செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த பயணி பொன்னுரங்கனின் உடைமையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எபஹெடிரின் எனும் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 4 கிலோ இருக்கும். இதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொன்னுரங்கன், விமானத்தில் மலேசியாவுக்கு போதைப்பொருளை கடத்த இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 4 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். போதைப்பொருளின் சிறிதளவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக மும்பையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்க உள்ளனர்.

மேலும் அவருக்கு இந்த போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது? அதனை யாருக்கு கொண்டு செல்ல கடத்த முற்பட்டார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com