மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் கைதான 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி; போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்து விழுந்ததால் காயம்

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தவறி விழுந்ததால் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் கைதான 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி; போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்து விழுந்ததால் காயம்
Published on

மதுரை,

மதுரை புதூர் ராமவர்மநகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் புதூர் ஜவகர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் அடிப்படையில், புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக ஒரு இடத்தில் பதுங்கி இருந்த ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் சிக்கியவர்களில் சிலர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சேவல் சண்டையால் ஏற்பட்ட பகையில் நடந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில், அந்த கும்பல் ராஜாவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் இந்த கொலை தொடர்பாக பாலகுமார் (வயது 19), ஹரிகிருஷ்ணன் (20), நிஜாமுதீன், தவ்பீக் (19), குட்டை கார்த்திக் (21), மகேஷ்குமார்(19), தங்கபாண்டி(19), கார்த்தி(22), சரவணன்(32), முகமதுரியாஸ்(22), கோபி(19), சூரியா(20), சாகுல்(20) உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் 7 பேரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். அப்போது அவர்கள் கீழே விழுந்து கை, கால் அடிப்பட்ட நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com