மாகிம் நகைக்கடை கொள்ளையில் ஊழியர், கூட்டாளி கைது ரூ.1.90 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்

மும்பை மாகிம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஊழியர், கூட்டாளி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் தங்கம், வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாகிம் நகைக்கடை கொள்ளையில் ஊழியர், கூட்டாளி கைது ரூ.1.90 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்
Published on

மும்பை,

மும்பை மாகிம் மோரிரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் பான்சிமால் ஜெயின்(வயது78) என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் காட்கோபரில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மதியம் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த பான்சிமால் ஜெயினை, ஊழியர் நரேஷ் குமார் துப்பாக்கி முனையில் மிரட்டி கயிற்றினால் கட்டிப்போட்டார்.

பின்னர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அங்கிருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடை ஊழியர் மற்றும் அவரது கூட்டாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தப்பி சென்ற 2 பேரும் பால்கர் மாவட்டம் வசாயில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ 500 கிராம் தங்கநகைகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 90 லட்சம் ஆகும். மேலும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஊழியர் நரேஷ் குமார் தனது பெயரை பொய்யாக கூறி அங்கு வேலையில் சேர்ந்தது தெரியவந்தது. அவரது உண்மையான பெயர் ராணாராம் புரோகித் (வயது21) என்பதும், அவரது கூட்டாளியின் பெயர் புக்ராஜ் சாய்தாராம் (21) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com