வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருக்கடையூரில், வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
Published on

பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே திருக்கடையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 45). இவர், அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்ட அஸ்திவாரத்துக்கு குழி தோண்டினார். அப்போது 2 அடி ஆழத்தில் பானை போன்ற வடிவில் ஒரு பொருள் தென்பட்டது. உடனே அதனை உடையாமல் தோண்டி பத்திரமாக வெளியே எடுத்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், தரங்கம்பாடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தாசில்தார் முருகேசன், தில்லையாடி வருவாய் ஆய்வாளர் சத்தியபாமா ஆகியோர் மேற்கண்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கண்டெடுக்கப்பட்டது முதுமக்கள் தாழி என்பது தெரியவந்தது. பின்னர் தாசில்தார், முதுமக்கள் தாழியை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்.

3 அடி உயரம்

இதுகுறித்து தாசில்தார் கூறியதாவது:- இந்த முதுமக்கள் தாழி 3 அடி உயரத்தில் உள்ளது. மேலும், முதுமக்கள் தாழியின் கீழ் பகுதி கூம்பு வடிவில் காணப்படுகிறது. இந்த முதுமக்கள் தாழி எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது தகுந்த ஆய்வுக்கு பின் தெரிய வரும்.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com