

பண்ருட்டி,
புதுப்பேட்டை அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுபாஷ் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டுக்கு வந்தார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), ரமேஷ் ஆவார்கள். தற்போது இவர்கள் இருவரும் ஓசூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிகண்டன், ரமேசின் மகன் ரோசன்(8) ஆகியோர் ஓசூரில் இருந்து தங்களது சொந்த கிராமமான பணப்பாக்கத்துக்கு புறப்பட்டனர். இவர்கள் நேற்று காலை 4 மணியளவில் பஸ்சில் பண்ருட்டி பஸ்நிலையத்தில் வந்து இறங்கினார்கள். இதையடுத்து, இருவரையும் அழைத்து வருவதற்காக சுபாஷ் தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி வந்தார்.
பின்னர் அவர்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு பணப்பாக்கம் நோக்கி சுபாஷ் வந்தார். அப்போது பண்ருட்டி அடுத்த பூங்குணம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீத எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் அந்த வழியாக வந்த மாட்டுவண்டி மீதும் அந்த பஸ் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சுபாஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மணிகண்டன், ரோஷன் மற்றும் மாட்டு வண்டியில் வந்த எல்.என்.புரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.