

மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 48), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலை நாப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் குமரனை கத்தியை காட்டி மிரட்டி, கையால் தாக்கி ரூ.2 ஆயிரத்து 460-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து குமரன் மணலி புதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டவர் ரவுடியான எண்ணூரை சேர்ந்த தனசேகரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல இணை கமிஷனர், மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.