மணிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மணிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணிமங்கலம் ஊராட்சியில் பெரியார்தெரு, கிழக்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, பவுண்டுதெரு, உள்ளிட்ட தெருக்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சிக்கு சொந்தமான 45 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்த கிணற்றில் உள்ள நீரை மின்மோட்டார் மூலம் குழாய் வழியாக அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி ஊராட்சி பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கிணற்றில் வெறும் 2 அடி அளவில் மட்டுமே நீர் உள்ளது. இன்னும் சில நாட்களில் அந்த தண்ணீரும் வற்றி விடும். ஆகவே இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

குடிநீர் பற்றாக்குறையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் புதியதாக குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com