

ஆக்கூர்,
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே குருமாணக்குடியில் கண்ணாயிரமுடையார் கோவில் உள்ளது. இங்கு இந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜை, வர்ண பூஜை நடைபெற்றது.
அஸ்திர தேவர்
இதனையடுத்து சாமி, அம்மனை சிறப்பு அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் அஸ்திர தேவருக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியபொடி, பஞ்சாமிர்தம், சந்தனம், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் குளத்தில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் புனித நீராடினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் செம்பனார்கோவில் அருகே பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில், கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.