மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் : முதல்-மந்திரி அறிவிப்பு

மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் : முதல்-மந்திரி அறிவிப்பு
Published on

மும்பை,

மராத்திய மக்கள் தொகையில் 30 சதவீதத்தை கொண்ட மராத்தா மக்கள் நீண்ட காலமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாயத்தினரின் கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த தகவல்களை சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் கமிட்டி அமைந்தார். இந்த கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற புதிய பிரிவின் கீழ் மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளோம்.

பிற்படுத்தப்பட்டோர் கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று மந்திரிசபை இந்த முடிவை எடுத்திருக்கிறது.

சட்டசபை கூட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டசபை கூடுதல் கமிட்டி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தங்கர் சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தங்கர் சமுதாயத்தினருக்கு தற்போது நாடோடி பழங்குடியினர் பிரிவின் கீழ் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் எஸ்.டி.பிரிவில் தங்களை இணைக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே நாங்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து பரிந்துரை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com