மெரினா கடற்கரையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

மெரினா கடற்கரையில் தடுப்புகளை எடுக்க கூறி தகராறில் ஈடுபட்டு போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
Published on

அடையாறு,

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் மாரிகண்ணன் உள்பட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு 1 மணியளவில் சர்வீஸ் சாலை வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் மாரிகண்ணனிடம், அங்கிருந்த தடுப்புகளை எடுக்கும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் திடீரென போலீஸ்காரர் மாரிகண்ணனை சரமாரியாக தாக்கினர்.

அருகில் இருந்த சக போலீசார், அந்த வாலிபர்களை தடுத்து மடக்கி பிடித்தனர். வாலிபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் மாரிகண்ணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு வலது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதற்காக அவரது கையில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளது.

பிடிபட்ட 2 வாலிபர்களையும் மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், திருவல்லிக்கேணியை சேர்ந்த மனோஜ்குமார்(வயது 21), விக்னேஷ்(22) என்பது தெரிந்தது. இதுபற்றி மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனோஜ்குமார், விக்னேஷ் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com