சேலத்தில் 26 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் கலெக்டர் ரோகிணி நடத்தி வைத்தார்

சேலத்தில் 26 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை கலெக்டர் ரோகிணி நடத்தி வைத்தார்.
சேலத்தில் 26 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் கலெக்டர் ரோகிணி நடத்தி வைத்தார்
Published on

சேலம்,

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாநில அளவில் சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண விழா நேற்று சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார்.

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி வரவேற்று பேசினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி, நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இதையடுத்து மணமக்களுக்கு பீரோ, கட்டில், பட்டு வேட்டி, புடவை, சட்டை, மிக்சி, கிரைண்டர், பித்தளை பூஜை பாத்திரங்கள், மெத்தை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 16 வகையான சீர் வரிசைகளை வழங்கி வாழ்த்தினர்.

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். தான் சம்பாதித்த பெருமளவு பணத்தை மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கினார். அவரை தொடர்ந்து ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அவரது வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார். விழாவில் கலெக்டர் ரோகிணி பேசும் போது கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக் கான குறை தீர்க்கும் கூட்டம் நடத்திய போது அதில் கலந்து கொண்டு ஒரு பெற்றோர் தனது மாற்றுத்திறன் படைத்த மகளுக்கு அரசு நலத்திட்டம் எதுவும் வேண்டாம். என் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி வைத்தால் போதும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து சேலம் சுயம்வரம் என்ற இணைய தளம் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இந்தியாவிலேயே முதன் முறையாக சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 26 ஜோடிகள் அவர்களாக தேர்வு செய்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்களுக்கு தற்போது திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சுயம்வரம் இணையதளம் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும். எனவே சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் ஆண்டிற்கு 2 அல்லது 3 முறை நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் மதிப்பு மிக்கவர்களாகவும், சுயமாக வாழ்வதற்காகவும் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com