திருமணமான 2 மாதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புதுப்பெண் பிணம்: சப்-கலெக்டர் விசாரணை

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
திருமணமான 2 மாதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புதுப்பெண் பிணம்: சப்-கலெக்டர் விசாரணை
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் மகன் திருமூர்த்தி (வயது 26). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும் ஆந்திர மாநிலம் குப்பத்தை அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் ஆர்த்தி (21) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆர்த்தியின் பெற்றோர் இறந்து விட்டதால் அவர் தனது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்தியும், ஆர்த்தியும் காதல் திருமணம் செய்து கொண்டு மேட்டுசக்கரகுப்பத்தில் இல்லற வாழ்க்கையை தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள வீட்டில் ஆர்த்தி தூக்குப் போட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப் பதிவு செய்தார். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்த்தியின் சாவு குறித்து திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார். ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் வேறு மர்மம் ஏதும் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com