காரைக்குடியில் விறகு கட்டையால் அடித்து கொத்தனார் கொலை, அண்ணன் மகன் கைது

காரைக்குடியில் விறகு கட்டையால் அடித்து கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியில் விறகு கட்டையால் அடித்து கொத்தனார் கொலை, அண்ணன் மகன் கைது
Published on

காரைக்குடி,

காரைக்குடி காந்திபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). இவர் கொத்தனாராக வேலை செய்துவந்தார். இவருடைய அண்ணன் மகன் சரவணன். இவரும் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். சரவணனின் தந்தை இறந்துவிடவே சரவணனும், அவருடைய சகோதரனும் ஆறுமுகம் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றனர். சமீபத்தில் ஆறுமுகம், தனது அண்ணனின் சொத்து ஒன்றை விற்றுள்ளார். பின்னர் சொத்து விற்பனை செய்தற்கான பணத்தை சரவணனின் சகோதரருடைய மனைவியிடம் கொடுத்துள்ளார். சரவணன் செலவழித்து விடுவார் என்பதால் அந்த பணத்தை அவரிடம் கொடுக்கவில்லை.

இந்தநிலையில் தந்தையின் சொத்தை விற்பனை செய்த பணம் குறித்து சரவணனுக்கு தெரியவந்தது. இதனால் பணத்தை கேட்டு தனது சித்தப்பா ஆறுமுகத்திடம் தகராறு செய்தார். இருப்பினும் அந்த பணத்தை அவர் கொடுக்கவில்லை.

பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த சரவணன், நேற்று காலை ஆறுமுகத்தை விறகு கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது தப்ப முயன்ற அவரை மீண்டும் சரவணன் விரட்டிச் சென்று தாக்கினார். இதில் நிலைகுலைந்த ஆறுமுகம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்த தகவலின்பேரில் வந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த சரவணனை போலீசார் கைதுசெய்து காரைக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com