திருச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: திருவிழா போல குவிந்த இளைஞர்கள்; 5,826 பேருக்கு பணி நியமன ஆணை

திருச்சியில் நடந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு திருவிழாபோல இளைஞர்கள் குவிந்தனர். 5,826 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 121 பேர் வெளிநாட்டு பணிக்கு தேர்வானார்கள்.
திருச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: திருவிழா போல குவிந்த இளைஞர்கள்; 5,826 பேருக்கு பணி நியமன ஆணை
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உள்பட 171 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் உள்நாடு வேலைவாய்ப்பு மற்றும் அயல்நாட்டு (வெளிநாடு) வேலைவாய்ப்பு பணி என்ற தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனம் கலந்து கொண்டு வேலைநாடுனர்களுக்கு அயல் நாட்டுப்பணிகளை பெற்றுத்தரும் பதிவுப்பணிகளை மேற்கொண்டது.

8-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் என்ஜினீயர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு தேடி கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரிக்கு வெளியே என படித்த பட்டதாரிகள், இளைஞர்கள் கூட்டம் திருவிழாபோல காணப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

வேலைவாய்ப்பு முகாமை திருச்சி மண்டல வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் அனிதா, துணை இயக்குனர் சுப்பிரமணியன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் பரமேஸ்வரி மற்றும் தொழிலாளர் நல அலுவலர் ஆகியோர் முன்னின்று நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஜமால் முகமது கல்லூரியில் நிறுவனங்கள் தனியாக ஸ்டால்கள்போல அமைத்து, தங்களது நிறுவனத்தில் என்னென்ன பணிக்கு ஆட்கள் தேவை என்றும், கல்வித்தகுதி குறித்த விவரங்கள், மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களை வைத்திருந்தனர்.

இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை சரிபார்த்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து உடனடியாக பணிக்கான ஆணையையும் வழங்கினர். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் முகாமில் பங்கேற்றனர்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

மேலும் முகாமில் சவுதி அரேபியா, ஓமன் ஆகிய வெளிநாடுகளில் செவிலியர்கள், மயக்க மருந்து நிபுணர், எக்ஸ்ரே நிபுணர் உள்ளிட்ட பல்வேறு பணிக்கு பி.எஸ்சி படித்த ஆண், பெண் இருபாலரும், பி.இ., பி.டெக், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்த ஆண்களுக்கும் வேலைவாய்ப்புகள் இருப்பதாக கூறி ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். முகாம் காலையில் 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடந்தது. வேலைதேடி வந்திருந்தவர்களுக்கு அவ்வப்போது மைக் மூலம் அறிவுரைகள் சொல்லப்பட்டது.

5,826 பேர் பணி நியமனம்

வேலைவாய்ப்பு முகாமில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 14,471 பேர் ஆவர். அவர்களில் தகுதியும், குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலைபார்க்க விருப்பமும் உள்ளவர்கள் என மொத்தம் 5,826 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மாற்றுத்திறனாளிகள் 63 பேர் ஆவர்.

இதுபோல சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளில் தங்கி வேலைபார்க்க விருப்பம் உள்ளவர்கள் 121 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களுக்கு வேலைக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கினார். மேலும் விருப்பத்துடன் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேரும் படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை அவர் வெகுவாக பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com