பள்ளிப்பட்டில் கட்டிட பணியில் மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

பள்ளிப்பட்டில் கட்டிட பணியில் மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி.
பள்ளிப்பட்டில் கட்டிட பணியில் மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ரங்கய்ய பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 39). கட்டிட மேஸ்திரியான இவர், பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலையில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார்.

அப்போது, இவர் வேலை நேரம் முடிந்து கை, கால்களை கழுவி விட்டு அந்தக் கட்டிடத்தில் உள்ள மின் மோட்டார் சுவிட்சை அணைக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில் சுருண்டு கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோணேட்டம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணாவிற்கு சுசிலா (30) என்ற மனைவியும், மோனிஷா (14) என்ற மகளும், விக்னேஷ் (12), தினேஷ் (10) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com