தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளவிடக்கோரி ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகம் முற்றுகை

தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளந்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளவிடக்கோரி ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகம் முற்றுகை
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ராஜாநகரம் மோட்டூர் காலனியில் வசிக்கும் சிலருக்கு 20 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்களுக்கு நிலத்தை அளந்து தரவில்லை. இதனால் இவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட முயன்றபோது ராஜாநகரம் கிராம மக்கள் அவர்களை வீடு கட்டவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு போலீசாரால் தடுக்கப்பட்டு வந்தது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக இவர்களால் அங்கு வீடு கட்ட முடியாமல் போனது.

இந்த சம்பவங்கள் நடைபெற்றபோது இந்த பகுதி பள்ளிப்பட்டு தாலுகாவில் இருந்தது. தற்போது இந்த பகுதி ஆர்.கே.பேட்டை தாலுகாவில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை எடுத்து கொண்டு ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையை அளந்து தரக்கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை அவர்கள் திருப்பித்தர முயன்றனர். ஆனால் அதிகாரிகள் அதை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் காலையில் தொடங்கிய முற்றுகை மதியமும் தொடர்ந்தது. இதனால் முற்றுகையிட்ட மக்கள் அலுவலகத்திற்கு வெளியே சமையல் செய்ய முயன்றனர். அப்போது ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து வந்து அங்கு சமையல் செய்ய பற்றவைத்த அடுப்பில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதையடுத்து திருத்தணி ஆர்.டி.ஓ. பவனந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்த மாதம் 26-ந் தேதி அவர்களுக்கு வீட்டுமனை இடத்தை அளந்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com