

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 52). இறைச்சி வியாபாரி. இவரது வீட்டில் சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவருடைய வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது, அவருடைய வீட்டில் 28 கிலோ சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.
இதையடுத்து சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஜெயராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து சித்தரேவு வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்களிடம் ஜெயராஜையும், பறிமுதல் செய்த சந்தன கட்டைகளையும் போலீசார் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறயினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சந்தன மரங்களை வெட்டி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தாரா? அல்லது விற்பனைக்காக வாங்கி வைத்திருந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.