தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கைகலப்பு

பாளையங்கோட்டையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கைகலப்பு
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தி.மு.க.& அ.தி.மு.க.வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந்தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை நிறைவடைந்தது. நேற்று வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து மாலையில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் வேட்புமனுக்கள் வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

வேட்புமனு வாபஸ்

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 7&வது வார்டில் போட்டியிடுவதற்காக தி.மு.க, அ.தி.மு.க/, அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

தொடர்ந்து 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளரை தவிர சுயேச்சை வேட்பாளர் நாகமணி மட்டும் வேட்புமனுவை வாபஸ் பெறாமல் இருந்தார். வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான நேரத்தை கடந்த பின்னர், மாலையில் சின்னம் பெறுவதற்காக நாகமணி பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்துக்கு வந்தார்.

கைகலப்பு

அப்போது தி.மு.க.வினருக்கும், சுயேச்சை வேட்பாளர் நாகமணிக்கு ஆதரவாக வந்த அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு கைகலப்பானது.

உடனே பாளையங்கோட்டை போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com