கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி: இளம்பெண்ணின் கள்ளக்காதலன் அதிரடி கைது - பரபரப்பு தகவல்கள்

நாகர்கோவிலில் கூலி படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற இளம்பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி: இளம்பெண்ணின் கள்ளக்காதலன் அதிரடி கைது - பரபரப்பு தகவல்கள்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 38), புகைப்பட கலைஞர். இவருடைய மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 2 மாதத்துக்கு முன்பு வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணேஷ் கடுமையாக தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி காயத்ரி கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த கருணாகரன், விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கணேசை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்ட காரணமாக இருந்த காயத்ரியின் கள்ளக்காதலன் மதுரையை சேர்ந்த முகமது யாசினை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் முகமது யாசின் மதுரையில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குமரி மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் மதுரை சென்று, 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது யாசினை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது மதுரையை பூர்வீகமாக கொண்ட அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவிலில் தான் வசித்து வந்தார். அந்த சமயத்தில் காயத்ரிக்கும், முகமது யாசினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு 2 பேரும் காதலிக்க தொடங்கினர். ஆனால் முகமது யாசினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்தது. எனினும் முகமது யாசினை, காயத்ரி காதலித்து உள்ளார்.

மேலும் முகமது யாசின் பீச்ரோடு பகுதியில் மழலையர் பள்ளியை தொடங்கி இருக்கிறார். அந்த பள்ளிக்கு தன் கள்ளக்காதலியான காயத்ரியை மேலாளராகவும் நியமித்து உள்ளார். காயத்ரியின் காதல் விவகாரம் அவருடைய குடும்பத்தாருக்கு தெரியவரவே உடனடியாக கணேசுடன் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் திருமணத்துக்கு பிறகும் தன் கள்ளக்காதலன் முகமது யாசினை அவர் மறக்கவில்லை. தினமும் செல்போனில் பேசி வந்திருக்கிறார். குறிப்பாக இரவில் கணவர் தூங்கிய பிறகு தான் பேச தொடங்கி உள்ளார். காயத்ரிக்கு திருமணம் ஆன சில மாதங்களில் முகமது யாசின் தன் சொந்த ஊரான மதுரைக்கு சென்றுவிட்டார். ஆனாலும் அவ்வப்போது நாகர்கோவிலுக்கு வந்து காயத்ரியை சந்தித்து வந்துள்ளார். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட விவகாரங்கள் நடந்துள்ளன. காயத்ரி கடைசியாக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.10 லட்சத்தை முகமது யாசினுக்கு கொடுத்துள்ளார்.

இந்த பணம் தொடர்பாக மனைவியிடம் கணேஷ் விசாரித்த போது குடும்பத்தில் பிரச்சினை உருவானது. கள்ளக்காதலன் திட்டப்படி காயத்ரி கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றது தெரியவந்தது. பிறகு கைதான முகமது யாசினை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com