

பொன்னமராவதி,
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று தரைக்கடை சிறு வியாபாரிகள், விவசாயிகள் வந்தனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காய்கறிகளை சந்தை வீதி சாலையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் இது தொடர்பான மனுவை பேரூராட்சி செயல்அலுவலரிடம் கொடுக்க சென்றனர். ஆனால் அவர் அந்த மனுவை வாங்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் செயல் அலுவலரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்பு பொன்னமராவதி தாசில்தாரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.