கஞ்சித்தொட்டி திறந்து வியாபாரிகள் போராட்டம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்ததை கண்டித்து வியாபாரிகள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஞ்சித்தொட்டி திறந்து வியாபாரிகள் போராட்டம்
Published on

கொடைக்கானல்:

சுற்றுலா பயணிகளுக்கு தடை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், சுற்றுலாதலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்தது.

அதன்படி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

இதனால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கோரியும் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடைகளை அடைத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

கஞ்சித்தொட்டி திறப்பு

இந்தநிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், குதிரை சவாரி தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள், திடீரென அப்பகுதியில் கஞ்சி தொட்டியை திறந்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அங்கு காய்ச்சப்பட்ட கஞ்சியை வியாபாரிகள் உள்பட அனைவரும் குடித்தனர். மேலும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

தற்காலிக நிறுத்தம்

போராட்டம் காரணமாக, கொடைக்கானல் ஏரிச்சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

இதனால் நகர் பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்தநிலையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வருகிற 26-ந் தேதி வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com