சங்கரன்கோவிலில் வியாபாரிகள் திடீர் சாலைமறியல் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

சங்கரன்கோவிலில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நேற்று வியாபாரிகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவிலில் வியாபாரிகள் திடீர் சாலைமறியல் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
Published on

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தவசு திருவிழா வருகிற 3-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 12நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு மாநிலம் முழுவதும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். பக்தர்களின் வசதிக்காக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தி.மு.க. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சங்கரன்கோவில் நகரசபை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த மனு மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை ஆணையாளர் முகைதீன் அப்துல் காதர் உறுதி அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக அவரது உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் நகரசபை அதிகாரிகள் நேற்று முன்தினம் திருவேங்கடம் சாலை, திருநீலகண்டர் ஊருணி செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது வாறுகாலில் இருந்த மேற்கூரை,நடைபாதை உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்றக்கோரி ஏராளமான வியாபாரிகள் திருவேங்கடம் சாலையில் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com