மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ரூ.23 லட்சம் மோசடி பெண் அதிகாரி கைது

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ரூ.23½ லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மோசடி பணத்தில் அவர் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ரூ.23 லட்சம் மோசடி பெண் அதிகாரி கைது
Published on

பூந்தமல்லி,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இங்கு இணை பொதுமேலாளராக இருப்பவர் பார்த்திபன். இவர், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் உதவி கணக்காளராக பணிபுரிந்து வந்த பர்கத்பானு(வயது 24) என்ற பெண், கடந்த ஆண்டு பணியில் இருந்து நின்றுவிட்டார். அதன்பிறகு கணக்குகளை ஆய்வு செய்தபோது ஒப்பந்ததாரருக்கு செல்லவேண்டிய ரூ.23 லட்சத்து 53 ஆயிரத்து 300-ஐ ஒப்பந்ததாரர் வங்கி கணக்கிற்கு அனுப்பாமல் வேறு ஒருவரின் வங்கி கணக்கில் பர்கத்பானு மாற்றி அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி அந்த பணத்தை பெற்றுத்தரவேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுதொடர்பாக செம்மஞ்சேரி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிகாரியான பர்கத்பானுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பர்கத்பானு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்யும் வேலைகளுக்கு அவர்கள் செய்த செலவுகளுக்கு உண்டான பணத்துக்கு உரிய ஆவணங்களை ஆய்வுசெய்து அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தும் உதவி கணக்காளராக வேலை செய்து வந்துள்ளார்.

குடும்ப கஷ்டத்தில் இருந்து வந்த பர்கத்பானு, ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு வந்தார். இதற்காக தனியார் ஒப்பந்ததாரருக்கு செலுத்தவேண்டிய ரூ.23 லட்சத்து 53 ஆயிரத்து 300-ஐ அவர்களுக்கு செலுத்தாமல் பர்கத்பானு தனது தம்பி முகமது ஜனத் என்பவர் வங்கிக்கணக்கில் தெரிந்தே மாற்றி உள்ளார்.

இதுகுறித்து அவரது தம்பி கேட்டபோது, வங்கியில் கடன் கேட்டிருந்தேன். அந்த தொகை வந்திருப்பதாக கூறி உள்ளார். அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியை பர்கத்பானு ராஜினாமா செய்துவிட்டார்.

பின்னர், கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது அவர் பணம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மோசடி பணத்தை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது திருமணத்தை பர்கத்பானு ஆடம்பரமாக நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரிடமிருந்து ரூ.8 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான பர்கத்பானு தற்போது கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com