மினிபஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் பலி குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்

மினிபஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பிய 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மினிபஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் பலி குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்
Published on

தென்காசி,

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடைவிளையைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அஜித் (22). இவர்கள் 2 பேரும் அங்குள்ள இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சிவசங்கரும், அஜித்தும் நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு வந்தனர். அங்குள்ள அருவிகளில் குளித்து விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்கள். மோட்டார் சைக்கிளை சிவசங்கர் ஓட்டினார்.

குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது, எதிரே தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கு ஒரு மினி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினிபஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சிவசங்கர், அஜித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர்.

மேலும் இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவரான சாம்பவர்வடகரையைச் சேர்ந்த குமார் (25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மினிபஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com