சிறப்பாக பணியாற்றிய 11 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 பேருக்கு நல்லாசிரியர் விருதை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய 11 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான விருது வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி. சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்), கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இறைவனுக்கு அடுத்தபடியாக ஒரு மனிதனை உருவாக்கி செதுக்கி மகத்தான பணியை செய்யும் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும் என்ற வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த 375 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

குடும்ப விழா

நான் ஆசிரியராகவே பணியாற்றிவன் என்பதால் ஆசிரியர் பணி என்பது எவ்வளவு முக்கியமான பணி என்பதை நன்கு உணர்ந்தவன். ஆகையால் இந்த விழாவை எனது குடும்ப விழாவாக நான் கருதுகிறேன். ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கல்வி அலுவலர்கள் முனியசாமி (கோவில்பட்டி), வசந்தா (தூத்துக்குடி), தமிழ்செல்வி (திருச்செந்தூர்), மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வக்குமார், பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் சசிக்குமார், உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com