சொந்த கிராமத்தில் வயலில் தொழிலாளர்களுடன் வேலை செய்த அமைச்சர் கமலக்கண்ணன்; கவர்னர், முதல்-அமைச்சர் பாராட்டு

சொந்த கிராமத்தில் வயலில் இறங்கி தொழிலாளர்களுடன் வேளாண்மைதுறை அமைச்சர் கமலக்கண்ணன், வேலை செய்தார். இதை புதுச்சேரி கவர்னர் கிரண் பெடியும்,முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பாராட்டி உள்ளனர்.
சொந்த கிராமத்தில் வயலில் தொழிலாளர்களுடன் வேலை செய்த அமைச்சர் கமலக்கண்ணன்; கவர்னர், முதல்-அமைச்சர் பாராட்டு
Published on

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலத்தின் வேளாண்மைதுறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். இவருடைய சொந்த ஊர் திருநள்ளாறு அருகே உள்ள அம்பகரத்தூர் கிராமம் ஆகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த கமலக்கண்ணன், அமைச்சரான பின்னும் தனது வயலை உழுவது, நாற்று நடுவது, உரம் தெளிப்பது உள்ளிட்ட பணிகளை பார்வையிட செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அமைச்சர் கமலக்கண்ணன், தனது சொந்த கிராமமான அம்பகரத்தூரில் உள்ள வயலுக்கு சம்பா நடவு பணிகளை பார்வையிட சென்றார். அப்போது வயல் சரிவர உழவு செய்யப்படாமல் மேடு, பள்ளங்களாக காட்சி அளித்தது. இதை பொருட்படுத் தாமல் தொழிலாளர்கள் நாற்று நடுவதற்கு தயாரானார்கள்.

இதை பார்த்த அமைச்சர் நிலத்தை சரிவர உழுது சமன் செய்யாமல் நடவு நட்டால் பயிர் நன்றாக வளராது என கூறி, தொழிலாளர்களுடன் வயலை உழும் பணியில் ஈடுபட்டார். அப்போது சரிவர உழவு செய்யப்படாத இடங்களை மண்வெட்டியால் சமன்படுத்தினார்.

உழும் பணி முடிவடைந்ததும் அமைச்சர், நாற்றுகளை வயலுக்கு கொண்டு வந்து தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். கைலியை கட்டிக்கொண்டு தங்களுடன் அமைச்சர் வேலை செய்ததால் தொழிலாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அமைச்சர் வயலில் இறங்கி வேலை செய்த புகைப்படங்கள் வாட்ஸ் அப், முகநூலில் வேகமாக பரவி வருகின்றன. தொழிலாளர்களுடன் வயலில் இறங்கி வேலை செய்த அமைச்சரை, புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com