கவர்னர் கிரண்பெடியுடன் அமைச்சர் கந்தசாமி சந்திப்பு சந்தேகங்களுக்கு நேரில் விளக்கம் அளித்தார்

கவர்னர் கிரண்பெடியை நேரில் சந்தித்த அமைச்சர் கந்தசாமி நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கவர்னருக்கு எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
கவர்னர் கிரண்பெடியுடன் அமைச்சர் கந்தசாமி சந்திப்பு சந்தேகங்களுக்கு நேரில் விளக்கம் அளித்தார்
Published on

புதுச்சேரி,

புதுவை கவர்னருக்கும் அமைச்சரவைக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் துறைமுக தூர்வாரும் திட்டம், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பெடி முட்டுக்கட்டையாக இருப்பதாக அமைச்சர் கந்தசாமி குற்றஞ்சாட்டினார்.

கவர்னரை திரும்பப்பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி சென்று பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். அமைச்சர் கந்தசாமிக்கு ஆதரவாக ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த அமைப்பினரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி டெல்லி சென்று உண்ணாவிரதம் இருக்கும் முன்பு கவர்னர் மாளிகைக்கு வந்து நலத்திட்டங்கள் தொடர்பாக தன்னுடன் விவாதிக்குமாறு அமைச்சர் கந்தசாமிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமிக்கு 2 முறை கடிதமும் அனுப்பியிருந்தார்.

இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருடன் முதல்அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது நிதித்துறை செயலாளர் கந்தவேலு, கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

சந்திப்பின்போது நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கவர்னரின் சந்தேகங்களுக்கு அமைச்சர் கந்தசாமி விளக்கம் அளித்தார். சுமார் 2 மணி நேரம் அமைச்சர் கந்தசாமி கவர்னருடன் நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதித்தார்.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கவர்னரின் அழைப்பை ஏற்று நான் அவரை சந்தித்து பேசினேன். சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். ஏழைகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com