கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் தனியார் ஆஸ்பத்திரிகளில் பறக்கும் படை சோதனை மந்திரி தகவல்

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் பறக்கும் படை சோதனை நடத்தும் என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் தனியார் ஆஸ்பத்திரிகளில் பறக்கும் படை சோதனை மந்திரி தகவல்
Published on

மும்பை,

கொரோனா பாதிப்பை அதிகம் சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. முதலில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இந்த சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பல தனியார் ஆஸ்பத்திரிகள் தொற்று பாதித்தவர்களிடம் பணத்தை கறந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

பறக்கும் படை

கொரோனா நோயாளிகளிடம் தனியார் ஆஸ்பத்திரிகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து மே 21-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதேபோல தனியார் ஆம்புலன்சுகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் தொடர்பாக ஜூன் 30-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை விவரங்களை ஆஸ்பத்திரிகளின் பிரதான வாயிலில் நோயாளிகளின் பார்வைக்காக வைக்க வேண்டும்.

அரசு உத்தரவை மீறி பல தனியார் ஆஸ்பத்திரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்து உள்ளன. அவ்வாறு செயல்படும் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள், ஆம்புலன்சுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும் படையினர் திடீரென சென்று சோதனை மேற்கொள்வார்கள்.

மேலும் ஜன ஆரோக்கிய காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com