

மங்களூரு:
காரில் கடத்தி கற்பழிப்பு
தட்சிணகன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா அம்டாடி கிராமம் அருகே கெம்புகுட்டே பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமி நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு நன்கு அறிமுகமான வாலிபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் அந்த மைனர் பெண்ணை கடத்தினார்.
பின்னர் ஒரு வீட்டில் சிறைவைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த சிறுமியை அவரது தோழனும், அவனுடைய நண்பர்கள் 4 பேரும் என மொத்தம் 5 பேர் கற்பழித்துள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட மைனர் பெண் மங்களூரு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான மைனர் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மங்களூரு டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள இன்னும் ஒரு வாலிபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.