சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் வருகிற 31-ந்தேதி கடைசி நாள்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் வருகிற 31-ந்தேதி கடைசி நாள்
Published on

தென்காசி,

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,

11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020-2021-ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டத்திற்கு தகுதியான மாணவ-மாணவிகள் வருகிற 31-ந்தேதி வரை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவிகளின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால் பகிரப்பட மாட்டாது.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்கள் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http//www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com