போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல் - மோசடி மன்னன் உள்பட 12 பேர் அதிரடி கைது

சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன் உள்பட 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல் - மோசடி மன்னன் உள்பட 12 பேர் அதிரடி கைது
Published on

சென்னை,

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 30). பட்டதாரியான இவர் நூதனமான முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் மோசடி தொழிலை தொடங்கி உள்ளார். சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்றை தொடங் கினார். அதில் ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளம்பெண்கள் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். ஏதாவது ஒரு நிதி நிறுவனம் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்வார்கள்.

பின்னர் கமிஷன் தொகையை வாங்கிக்கொண்டு கடன் வாங்கி தராமல் ஏமாற்றி விடுவார்கள். இதுபோல் கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு என்ற ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ரூ.8 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி, ரூ.1 லட்சம் கமிஷன் தொகையை வாங்கிக்கொண்டு, கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இதுபோல் நிறைய பேரிடம் லட்சக்கணக் கில் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக, செல்வராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை அடிப்படையில் மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன், அவரது மேலாளர் வளர்மதி (30) உள்பட 12 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்திய போலி கால்சென்டரிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com