10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்த நிபுணர், கொரோனாவுக்கு பலி

பாம்புகளை எந்தவித அச்சமும் இன்றி லாவகமாக பிடித்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு உதவியாக இருந்து வந்தார்.
10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்த நிபுணர், கொரோனாவுக்கு பலி
Published on

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் (வயது 62). இவர், பொதிகை தொலைக்காட்சியில் கேமராமேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிறுவயது முதலே அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்த ஸ்டான்லி பெர்னாண்டஸ், கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாம்பு பிடிக்கும் நிபுணராக வலம் வந்தார்.

இவர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் புகுந்த நல்ல பாம்பு உள்ளிட்ட பாம்புகளை எந்தவித அச்சமும் இன்றி லாவகமாக பிடித்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு உதவியாக இருந்து வந்தார். இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பொதுமக்களுக்கு சேவை செய்து உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்டான்லி பெர்னாண்டஸ், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பகுதியில் கம்பீரமாக வலம் வந்த அவர், கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புகூட பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார். துணை நோய் ஏதும் இன்றி, இந்த வயதிலும் சுறுசுறுப்புடன் இருந்து வந்தார். இதுவரை 10 ஆயிரம் பாம்புகளை தைரியமாக பிடித்துள்ள ஸ்டான்லி பெர்னாண்டஸ், கொரோனா தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பலியான ஸ்டான்லி பெர்னாண்டசுக்கு கொச்சி தெரசா(54) என்ற மனைவியும், ஷெரின் இம்மானுவேல்(32) என்ற மகளும், செட்ரிக்(28)என்ற மகனும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com