எண்ணூரில் தாயின் கள்ளக்காதலனை கொன்ற வாலிபர்: சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

எண்ணூரில் தாயின் கள்ளக்காதலனை கொன்ற வாலிபர், தன்னை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணூரில் தாயின் கள்ளக்காதலனை கொன்ற வாலிபர்: சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
Published on

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 52-வது பிளாக்கை சேர்ந்தவர் முருகன் (வயது 35). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை 3.30 மணியளவில் அதே குடியிருப்பின் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் ஏசு. இவர் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி ஆரோக்கியமேரி (48). வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நரேஷ் (21) என்ற மகனும், ரோஸ்மேரி (25) என்ற மகளும் உள்ளனர். ரோஸ்மேரியின் கணவர் மரியதாஸ்(33). இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது.

இந்தநிலையில் ஆரோக்கியமேரிக்கும், முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. முருகனுக்கு திருமணமாகவில்லை. இதனை அறிந்த நரேஷ், தனது தாயுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி முருகனை பலமுறை எச்சரித்தார். ஆனால் முருகன் கள்ளத்தொடர்பை விடவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ், தனது அக்காள் கணவர் மரியதாசுடன் சேர்ந்து முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து நேற்று மாலை முருகனை மது குடிக்க அழைத்துச் சென்று இருவரும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது,

இதையடுத்து எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9-வது தெருவில் பதுங்கி இருந்த நரேஷை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த நரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரனின் வயிற்றில் கத்தியால் குத்தினார். அதையும் மீறி போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார் நரேசை மடக்கி பிடித்தனர்.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன். நரேஷ் ஆகியோரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், அங்கு நரேசுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். சப்-இன்ஸ்பெக்டருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் நரேஷ், மரியதாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com