தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் - அண்ணனை கொலை செய்த வாலிபர் கைது

தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்து அண்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் - அண்ணனை கொலை செய்த வாலிபர் கைது
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முனீசுவரன்(வயது 22). இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றியதுடன் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்தாராம்.

இதுதொடர்பாக இவர் மீது ராமநாதபுரம் நகர் மற்றும் ஏர்வாடி போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முனீசுவரன் வீட்டில் அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டாராம். இதனை கண்டித்த தாய் பாப்பாவை(59) அவதூறாக பேசினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த முனீசுவரனின் தம்பி கலில் குமார்(20) என்பவர் அண்ணனை அருகில் கிடந்த கட்டையால் பலமாக தாக்கினாராம். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த முனீசுவரனை தாய் பாப்பா ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

ஆனால் வழியிலேயே முனீசுவரன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக தாய் பாப்பா ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கலில்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com