பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை ஊராட்சியில் உள்ள காமாட்சி நகரில் வசித்து வருபவர் குப்பன்.
பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை ஊராட்சியில் உள்ள காமாட்சி நகரில் வசித்து வருபவர் குப்பன். விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதியன்று தனது மனைவி தாட்சாயிணியுடன் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கும்பிலி கிராமத்திற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் திரும்பி வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த பீரோவில் இருந்த தாலி சரடு உள்ளிட்ட 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், குப்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஷாலினி (வயது 25) அவரது தாய் காஞ்சனா (50) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் குப்பன் வீட்டில் பீரோவில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர், குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com