

நல்லூர்
திருப்பூர் வீரபாண்டி விநாயகர் கோவில் அருகே உள்ள தோட்டத்து தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 50). இவர் வீட்டில் கைத்தறிகள் வைத்து நெசவுத்தொழில் செய்து வந்தார். இவரது தாயார் பார்வதி (70). இவர் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக தோசை மாவு அரைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
பார்வை குறைபாடு காரணமாக பார்வதி அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் கோவில்வழி பகுதியில் உள்ள கண் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பார்வதி தனது மகன் அழகர்சாமியுடன் சம்பந்தப்பட்ட கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தார். அங்கு சிகிச்சை முடிந்து மதியம் 2 மணி அளவில் அவர்கள் வெளியே வந்தனர். பின்னர் நல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகில் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது கோவில்வழியில் இருந்து செட்டிப்பாளையம் நோக்கி வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று அவர்கள் இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் சரக்குவாகனம் வயிற்றில் ஏறி இறங்கியதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பார்வதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் சரக்கு வாகன டிரைவர் அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பார்வதி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் இறந்தனர். இது தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பருதுனில்லா பேகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான பார்வதி, அழகர்சாமி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தின் டிரைவரை தேடிவருகிறார்கள். விபத்தில் பலியான அழகர்சாமிக்கு 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.