மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி மருத்துவ கல்லூரி மாணவர் கைது

சிதம்பரம் அம்பீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்செல்வன்(வயது 27). தர்மபுரியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர்கள் இருவரும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி மருத்துவ கல்லூரி மாணவர் கைது
Published on

செங்குன்றம்,

நேற்று காலை கார்த்திக்செல்வன், பிரபாகரன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் தடாவுக்கு சென்றனர். செங்குன்றம் அருகே ஆண்டார்குப்பம் சாலையில் சென்றபோது, மாதவரம் பால்பண்ணை கொசப்பூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்(52) என்பவர் கொசப்பூரில் இருந்து ஆண்டார்குப்பம் நோக்கி சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தார்.

அப்போது கார்த்திக்செல்வன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் அருள் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் கார்த்திக்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com