மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

கொடைரோடு அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த கரட்டழகன்பட்டியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய தம்பி அஜீத்குமார் (25).

நேற்று மாலை இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை புகழேந்தி ஓட்டினார். அப்போது மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் தளி என்னுமிடம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு புகழேந்தி, அஜீத்குமார் 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், புகழேந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

அஜீத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com