தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கொத்தனார் பலி 2 பேர் படுகாயம்

தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதியதில் கொத்தனார் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கொத்தனார் பலி 2 பேர் படுகாயம்
Published on

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வேனாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35). கொத்தனாரான இவர் கான்கிரீட் கலவை எந்திரத்தை வாடகைக்கு கொடுத்து வந்தார். நேற்று இரவு கோட்டியால் பாண்டிபஜாரில் இருந்து பூவந்தி கொள்ளை வழியாக வேணாநல்லூர் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இதேபோல் பூவந்திகொல்லை கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது மனைவி கமலாவுடன் மொபட்டில் கோட்டியால் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், துரைசாமி ஓட்டி மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த துரைசாமி, கமலா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி க்கைபபட்டது. இந்த விபத்து குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com